அடுத்த இரண்டாண்டுகளுக்கு அரசின் நகர்வு எப்படி அமையப் போகின்றது என்பதைக் கூறும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் உரை தமிழ் மக்களுக்குப் பெரும் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது. புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி தொடர்பில் அரச தலைவர் தனது உரை யில் எதையும் குறிப்பிடவில்லை.
ஐ.நா. மனித உரி மைகள் சபையில் இலங்கை இணை அனு சரணை வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நடைமுறைப்படுத்தல் தொடர்பாகவும் மைத்திரிபால சிறிசேன வாய் திறக்கவில்லை.
தேக்கமடைந்துள்ள புதிய அரசமைப்பு முயற்சிகள் மீள ஆரம்பிப்பது தொடர்பிலோ, அரசியல் தீர்வு தொடர்பாகவோ அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தனது கொள்கை விளக்க உரையில் குறிப்பிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த விடயங்களைத் தொட்டுக்கூட பார்க்காத அரச தலைவர் மைத்திரிபால, பொருளாதார நலன் குறித்தே அதிகம் உரையாற்றினார்.
அரசு இதுவரை நிறைவேற்றிய முக்கிய சட்டங்கள், சாதனைகள் என்பவற்றை அரச தலைவர் தனது உரையில் பட்டியலிட்டார். அதில் நாடாளுமன்று அரசமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்டமை தொடர்பில் மைத்திரி தனது கொள்கைப் பேச்சில் எதனையும் குறிப்பிடவில்லை. எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ள விடயப் பரப்புக்குள்ளும், அரசியல் தீர்வு தொடர்பாக அவர் கருத்து எதனையும் கூறவில்லை.
அரச தலைவர் தனது உரையில், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும், உண்மையான மக்கள் நேய செயற்திட்டங்களின் நிபந்தனைகளாக 15 விடயங்களைக் குறிப்பிட்டிருந்தார். அதில், தமிழ் மக்களின் சம உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட வேணவாக்களை ஏற்றுக்கொள்ளல், முஸ்லிம் மக்களின் நலன் மற்றும் சமூக, கலாசார தேவைகளை உறுதிசெய்தல், மலையக தமிழ் மக்களின் பொருளாதார, சமூக நிலையை மேம்படுத்தல், நாட்டின் பெரும்பான்மை சமூகமான சிங்கள மக்களின் கலாசார உரிமைகளை பலப்படுத்தி, உறுதி செய்து தேசத்தின் அடையாளத்தை வலுப்படுத்தல் என்ற விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
அவற்றுக்கு மேலதிகமாக, ‘நிலையான நாட்டின் அடித்தளம் தேசிய நல்லிணக்கமே ஆகும். உண்மையான தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்மானங்களை இயற்றத்தக்க கட்டமைப்பை அறிமுகப்படுத்த வேண்டும்.
அந்த நோக்கை வெற்றி கொள்வதற்கு தற்போது செயலில் இருந்துவரும் மாகாண சபை முறைமையை மேலும் பலப்படுத்துவது காலத்தின் தேவையாகும் என்று நான் நம்புகிறேன்.
எவ்வாறான விமர்சனங்கள் எழுந்த போதிலும் வடக்கு – கிழக்கு மக்களின் பொறுமையிழப்பினை நிரந்தரமாக சமரசப்படுத்த வேண்டுமாயின் மக்களின் விருப்பத்தையும் இணக்கப்பாட்டையும் பெற்ற அரசியல் வேலைத்திட்டமொன்றினை ஆரம்பித்தல் வேண்டும்.
பௌதீக ரீதியில் நாம் பயங்கரவாதிகளை தோற்கடித்த போதிலும் அவர்களின் கொள்கையினை முழுமையாக தோல்வியுறச் செய்வதற்கு இன்னும் முடியாது போயிருக்கின்றது. கடந்த மூன்றரை ஆண்டுகளாக பன்னாட்டு ரீதியிலான ஒத்துழைப்பை பெற்று அந்தக் கொள்கையினை தோல்வியுறச் செய்வதற்கே நான் முயற்சித்து வந்தேன் என்றும் அரச தலைவர் குறிப்பிட்டார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!