அதிதீவிர புயலாக மாறும் ‘ஃபானி’ புயல்: மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தல்.

சென்னைக்கு தென்கிழக்கே 870கிலோமீட்டர் தொலைவில் ஃபானி புயல் நிலைகொண்டுள்ளது என்றும் இந்த புயல் நாளை (செவ்வாய்கிழமை) அதிதீவிர புயலாக மாறுவதால், ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பவேண்டும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பாலச்சந்திரன், ஃபானி புயல் தொடர்ந்து தீவிர புயலாகவும், நாளை அதிதீவிர புயலாகவும் வலுப்பெறக்கூடும் என்று குறிப்பிட்டார். கடல் நிலையை பொறுத்தவரையில், ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். ஆகவே ஏப்ரல் 30 தொடங்கி மே 2ம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் கரைக்கு உடனடியாக திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், என்றார் பாலச்சந்திரன். இந்த புயல் வரும் மே 1ம்தேதி வரை வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம், தெற்கு ஆந்திரா கரைக்கு அருகில், 300 கிலோமீட்டர் தொலைவு வரைவந்து, பிறகு வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடும் என்றார்.

”மழையைப் பொறுத்தவரையில், ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் வடதமிழகத்தில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும்”. ”காற்றின் வேகத்தை பொறுத்தவரையில், வடதமிழக கடற்கரை பகுதிகளில் நாளை காலை பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் , சில சமயங்களில் 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசும். நாளை மாலை 50 கிலோமீட்டர் வேகத்திலும் ,சமயங்களில் 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!