யாழ்ப்பாணம் நகரில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகம் இயங்கும் ஸ்ரீதர் கட்டடத்தின் உரித்தை மீளப் பெற்றுத் தர வேண்டும் என்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் ஜூன் மாதம் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.
இரட்ணசபாபதி ஸ்ரீதர் உட்பட 6 பேர் மனுதாரர்களாகவும், ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவை எதிர்மனுதாரராகவும் குறிப்பிட்டு சட்டத்தரணி கேசவன் சயந்தனால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
1996ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையைப் பயன்படுத்தி அனுமதி எதுவுமின்றிச் சட்டவிரோதமாகக் குடியேறிய முதலாவது மனுதாரர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை ஏதும் வழங்காது ஆதனத்தையும், கட்டடத்தையும் வைத்துள்ளார்.
அதனால் உரிமையாளர்களான எமக்கு மாதம் ஒன்றுக்கு 75 ஆயிரம் ரூபா வீதம் ஏற்பட்ட இழப்பும் அதற்குரிய வட்டியையும் இணைந்து இதுவரை காலத்துக்குமான இழப்பீடாக 100 மில்லியன் ரூபாவை எதிர்மனுதாரர் வழங்க வேண்டும். தற்போது இடம்பெறும் வழக்குச் செலவுடன் கட்டடத்துடன் கூடிய ஆதனத்தின் உரித்தையும் பெற்றுத் தர வேண்டும் என்று மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
இந்த மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 6ஆம் திகதி அழைக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்ற நீபதிப வி.இராமகமலன் அனுமதித்தார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!