பாலியல் தொல்லை என்பது சோடிப்பாம்! – ரயில்வே ஊழியருக்கு வக்காலத்து வாங்கிய யாழ். சட்டத்தரணி

தமிழ்ப் பெண்ணுக்கு ரயில்வே ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்பது தவறான சோடிப்பு என்று, அவரது சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி றெமிடியஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற ரயிலில் பயணித்த பிரிட்டன் வாழ் குடும்பபப் பெண்ணுடன் தகாத முறையில் நடந்து கொண்ட ரயில்வே ஊழியர், யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று முன்தினம் மதியம் கைது செய்யப்பட்டார். விசாரணைகளின் பின்னர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று பிற்பகல் அவர் முற்படுத்தப்பட்டார்.

இதன்போது பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ரயில்வே ஊழியருக்கு எதிராக முதல் அறிக்கையை பொலிஸார் மன்றில் சமர்ப்பித்தனர்.

இதன்போது சந்தேக நபரின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி றெமீடியஸ், ரயிலில் மூன்றாம் வகுப்பு ஆசனத்துக்கு கட்டணம் செலுத்தி விட்டு இரண்டாம் வகுப்பு ஆசனத்தில் அமர்ந்திருந்ததாலேயே பெண் பயணியிடம் ரயில்வே ஊழியர் முரண்பட்டாரே தவிர அவர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற விடயம் தவறானான ஒர் சோடிப்பு என்று வாதிட்டார்.

அத்துடன் அவரைப் பிணையில் விடுவிக்க விண்ணப்பம் செய்தார். இதனை ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபரை ஒரு இலட்சம் ரூபா ஆள் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!