நல்லைக் கந்தனுக்கும் அதிரடிப்படை பாதுகாப்பு! – படையினர் குவிப்பால் பதற்றம்

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் மீது குண்டு தாக்குதல் நடத்தப்போவதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், கோவில் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவிலை சூழவுள்ள சுற்று வீதிகளின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு அதிகளவான இராணுவம், விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால், பரபரப்பான நிலை காணப்படுகின்றது.

கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள், கோவில் சூழலுக்கு கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பக்தர்கள் உடற் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவதால் பக்தர்கள் மத்தியில் அச்சமான மனநிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வடமாகாண ஆளுநருக்கு முகவரியிடப்பட்டு அநாமதேய கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. அக்கடிதத்தில் எனது கணவரும், வேறு சிலரும் இணைந்து நல்லூர் கோவிலில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த உள்ளதாக எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது. குறித்த அநாமதேய கடிதம் தொடர்பில் ஆளுநர் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, குறித்த பாதுகாப்பு கெடுபிடிகள் நல்லூர் கோவில் வளாகத்திலும், அதனை சூழவுள்ள பகுதிகளிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!