‘கருத்துக்கணிப்புகள் வெறும் வதந்தி; யாரும் நம்ப வேண்டாம்’ – மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

நாடாளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதையொட்டி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று மாலை வெளியாகின. டைம்ஸ் நவ், என்.டி.டி.வி, சி.என்.என். போன்றவை வெளியிட்ட கருத்துக்கணிப்புகள் அனைத்திலும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கு 24 இடங்களும், பா.ஜ.க.வுக்கு 16 இடங்களும், காங்கிரசுக்கு 2 இடங்களும் கிடைக்கும் என்றும், இடதுசாரி கட்சிகளுக்கு ஒரு இடமும் கிடைக்காது என்றும் கருத்துக்கணிப்புகள் வெளிவந்தன.

இந்நிலையில் இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில் வீண் வதந்தி பரப்பப்படுகிறது. இது போன்றவற்றை நான் எப்போதும் நம்புவது இல்லை. எனவே மக்கள் இதனை நம்ப வேண்டாம்.

இந்த கருத்துக்கணிப்புகள் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்யவும், எந்திரங்களை மாற்றவும் சூழ்ச்சி நடக்கிறது. எனவே எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒற்றுமையாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!