400 மாணவர்களின் கல்விக் கடனை பொறுப்பேற்ற தொழிலதிபர்!

அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் 400 மாணவர்களின் கல்விக்கடனை தானே செலுத்தவிருப்பதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள மோர்ஹவுஸ் ஆண்கள் கலைக் கல்லூரியில் உரையாற்றிய தொழிலதிபரான ராபர்ட் எஃப் ஸ்மித், மாணவர்களின் கல்விக்கடன் முழுவதையும் செலுத்த உள்ளதாகக் கூறி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்தார்.

ராபர்ட் எஃப் ஸ்மித் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால், அந்தக் கல்லூரியில் படித்து வரும் 400 மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கடனுக்கான பொறுப்பை ஏற்றுள்ளார். கல்வி கடனின் மொத்த மதிப்பு 40 மில்லியன் டொலர் என கூறப்படுகிறது. ஏற்கனவே ஸ்மித், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கருப்பின மாணவர்கள் பயிலும் இந்த கல்லூரிக்கு 1.5 மில்லியன் டொலர் உதவித்தொகையாக அறிவித்தார்.

இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட ராபர்ட் எஃப் ஸ்மித், “கடந்த 8 தலைமுறையாக எங்களது குடும்பம் இந்த நாட்டில் வசித்து வருகிறது, எனவே எனது குடும்பம் மாணவர்களின் கடனை முழுமையாகச் செலுத்த முடிவு செய்துள்ளது” என்று கூறினார்.

இவரின் அந்த அறிவிப்பினால் அங்கு கூடியிருந்த பேராசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் ஒரு நிமிடம் இன்ப அதிர்ச்சுக்குள்ளானார்கள். பின்னர் சத்தமிட்டு கரகோஷத்துடன் இவரது அறிவிப்பைக் கொண்டாடி நன்றியையும் தெரிவித்தனர்.

56 வயதாகும் ராபர்ட் எஃப் ஸ்மித், 2000-ம் ஆடு விஸ்டா ஈக்விட்டி பார்னர்ஸ் என்ற முதலீட்டு நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் மூலம் பல மென்பொருள் நிறுவனங்களில் இவர் முதலீடு செய்துள்ளார். ஃபோர்ப்ஸ் பில்லேனியர்ஸ் பட்டியலில், இவரது சொத்து மதிப்பு 5 பில்லியன் டாலர் என குறிப்பிடப்பட்டுள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!