ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தவேண்டியதில்லை. இருப்பினும், கட்சியின் முக்கிய ஐந்து பதவிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் முதல் முக்கிய பதவிகள் அனைத்திலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவேண்டுமெனக் கட்சியின் ஒரு தரப்பு, தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க வுக்கு எதிராகக் கடந்த இரண்டு மாதகாலமாகப் போர்க்கொடி உயர்த்தி வந்திருந்த நிலையிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியில் முழுமையான மறுசீரமைப்புகளை மேற்கொள்ளாவிடின் ரணிலுக்கு எதிராகப் பொது எதிரணியால் கொண்டு வரப்பட்டிருந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக, இராஜாங்க அமைச்சர்களான பாலித்த ரங்கே பண்டார மற்றும் வசந்த சேனநாயக்க ஆகியோர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
கட்சியின் அனைத்துப் பதவிகளிலும் முழுமையான மறுசீரமைப்பு செய்யப்படுமெனத் தலைமை அமைச்சர் ரணில் கொடுத்திருந்த வாக்குறுதியின் காரணமாகத் தீர்மானத்தை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சியினர் அனைவரும் வாக்களித்தனர்.
கடந்த மூன்று தினங்களாக ஐக்கிய தேசியக் கட்சியில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டன. மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் பிரகாரம் 12 பேர் அடங்கிய அரசியல் சபையொன்று உருவாக்கப்பட்டுள்ளதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளத் தீர்மானிக்கப் பட்டது.
தலைமைப் பதவியில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளவேண்டிய அவசியமில்லையெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சியின் துணைத் தலைவர், உப தலைவர், தவிசாளர், பொதுச் செயலர் ஆகிய பதவிகளில் எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் மாற்றங்கள் கொண்டுவருவதற்குத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!