ரணில் இருக்கும் வரை அரசைக் கவிழ்க்க முடியாது! – தலதா

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியில் இருக்கும் வரை ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாது என்று நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

ஆட்சியைப் பொறுப்பேற்றதில் இருந்து இயற்கை அனர்த்தம், அரசாங்கத்துக்கு எதிரான சூழ்ச்சிகள், குண்டுத்தாக்குதல் என அனைத்து சவால்களையும் எதிர்கொண்டோம். இவற்றை காரணங்காட்டி எங்களால் எதையும் செய்யாமல் இருந்திருக்க முடியும். ஆனால் அபிவிருத்தி பணிகளை நாங்கள் ஒருபோதும் இடைநிறுத்த போவதில்லை.

மகிந்த ராஜபக்ஷ காலத்தில் தற்போதுள்ள எந்த சுதந்திரமும் வழங்கப்பட்டிருக்கவில்லை. கடந்த அரசாங்கம் அபிவிருத்தியின் பேரைக்கொண்டு மக்களின் பணத்தை சூறையாடினார்களோ என்று சந்தேகம் ஏற்படுகின்றது. ஆனால் நாங்கள் மக்களின் பணத்தை சூறையாடி பிரச்சினையை ஏற்படுத்த போவதில்லை.

1977 தொடக்கம் 1994 ஆண்டு வரையில் செய்த வேலைத்திட்டங்களே 2015 ஆம் ஆண்டுவரை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இன்று அனைவரும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைக் குறைக்கூறுகின்றனர். ஆனால் பிரதமரின் அலோசனைகளின் காரணமாகவே இந்த அபிவிருத்தி பணிகளுக்கான நிதி முறையாக கிடைக்கப்பெறுகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருக்கும் வரை இந்த ஆட்சியை கவிழ்க்க முடியாது. அதனை கடந்த வருடம் மூண்ட அரசியல் நெருக்கடியின்போது நிரூபித்து காட்டியிருந்தோம்.

கடந்த அரசாங்கத்தால் ஊடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடாவடிகள் தொடர்பான விசாரணைகளும் தற்போது இடம்பெற்று வருகின்றன. வெள்ளை வேன் கடத்தல் கலாச்சாரத்தை கொண்ட ஆட்சியில் மகிந்த சர்வாதிகார பிரிவினரின் செயற்பாடுகளின் காரணமாகவே சுதந்திரகட்சியின் பொதுச்செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன அந்த கட்சியை விட்டு வெளியேறினார். ஆனால் மீண்டும் குடும்ப ஆட்சிக்கு இடமளிக்க போவதில்லை. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!