வாக்கு இயந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகள் சந்தேகம்!

விவிபாட் எனப்படும் ஒப்புகைச்சீட்டு எந்திரத்தில் வாக்குகள் சரிபார்க்கப்பட்டதன் மூலம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த குறைபாடும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் முறைகேடு நடைபெற வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன. இதையடுத்து யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபாட் எந்திரம் மூலம், பதிவாகும் 50 சதவீத வாக்குகளை சரிபார்க்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனால் ஒரு சட்டசபைத் தொகுதியில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 5 விவிபாட் வாக்குப் பதிவு சீட்டுக்களை எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்தது. உச்சநீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்டதுபோல் வாக்குகள் எண்ணப்பட்டன.

20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள், ஒப்புகைச் சீட்டு எந்திரம் மூலம் சரிபார்க்கப்பட்டதாகவும், இதில் ஒரு இடத்தில் கூட எவ்வித முரண்பாடும் கண்டுபிடிக்கப்படவில்லை என தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன்மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!