நாட்டின் சட்டத்தை அனைவரும் பின்பற்றி செயற்பட வேண்டும் என்றும் தற்போது நாட்டில் இயங்கி வருகின்ற அடிப்படைவாத கல்வி செயற்பாடுகள், சிறுவர் உரிமைகளை மீறுவதான இளவயது திருமணமுறை போன்ற விடயங்கள் குறித்து பாராளுமன்றம் விரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
திறைசேரியின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற டீ.பீ. ஜயதிலக நினைவு தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது,
அடிப்படைவாதப் போக்கைக்கொண்ட முஸ்லிம்கள் சிலரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில், அனைத்து முஸ்லிம் மக்களையும் எதிரிகளாக பார்ப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்த அடிப்படைவாதத்திற்கு எதிராக எம்முடன் இணைந்து செயற்பட ஏனைய அனைத்து முஸ்லிம்களும் தயாராகவே உள்ளனர்.
அதேவேளை இலங்கைக்கு பொருத்தமற்ற புர்கா ஆடையைத் தடை செய்வது குறித்தும் முஸ்லிம்களும் தொடர்ந்தும் வலியுறுத்தித்தான் வருகின்றனர்.
நாட்டின் சுதந்திர போராட்டங்களின்போது டீ. பீ.ஜயதிலக, டீ.எஸ். சேனாநாயக்க ஆகியோர்களுடன் இணைந்து நாட்டுக்காக முஸ்லிம் தலைவர்களும் செயற்பட்டனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தற்போதும் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக அடிப்படைவாதிகள் சிலரை தவிர ஏனைய அனைத்து முஸ்லிம் மக்களும் முன்வந்துள்ளனர்.
நாட்டின் சுமுகமான நிலைமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நாட்டுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களினாலே இன்று நாடு பின்னடைவைக் கண்டுள்ளது. பௌத்த சமயம் ஒருபோதும் இன மற்றும் மத பேதங்களை போதிக்கவில்லை.
சில அடிப்படைவாத முஸ்லிம்களால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளினால் பாதிக்கப்படுவது முஸ்லிம் மக்களே.மற்றும் அடிப்படைவாத கல்வி முறை, முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் குறித்தும் பாராளுமன்றில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும். நாட்டின் சட்டமானது அனைத்து மக்களுக்கும் சமமானது என்றும் குறிப்பிட்டார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!