அத்துரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரதம் ; ஜனாதிபதி தீர்வு வழங்காவிடின் பாரதூரமாகும் – சேமசிங்க

2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேடைகளில் கடந்த அரசாங்கத்தை தூற்றியவர்கள் இன்று தமது தவறினை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஒரு தீர்வை ஜனாதிபதி வழங்காவிடின் பிரச்சினை பாரதூரமாகும். பௌத்த மதத்தினர் மத்தியில் மாறுப்பட்ட கருத்துக்கள் ஏற்படுவதற்கு வழிகளை ஏற்படுத்திவிடவேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஷ்புல்லா, மேல்மாகண அமைச்சர் அசாத் சாலி, மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதினுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தும் இதுவரையில் ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

அடிப்படைவாதம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இந்த மூன்று பேர் தொடர்ந்து சாட்டப்பட்ட போதிலும் இவர்கள் அரசாங்கத்தில் அங்கத்துவம் வகித்து செல்வாக்கு செலுத்துகின்றார்கள். அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக எவ்வித சட்டநடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை. இதன் காரணமாகவே எதிர்தரப்பினர் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்துள்ளோம்.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆளுநர்கள் மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தொடர்பில் ஜனாதிபதி 24 மணித்தியாலத்திற்குள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய தேரர் விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி மதிப்பளிப்பளிக்கவில்லை.

குண்டு தாக்குதலினை தொடர்ந்து முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஹேமசிறி பெர்ணான்டோவை பதவி விலக்கியும், பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவையும் ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தினார். ஆனால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆளுநர்கள் விடயத்தில் நிறைவேற்று அதிகாரத்தை தவிர்து சாதாரண அதிகாரத்தை கூட ஜனாதிபதி பயன்படுத்தவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!