பாகிஸ்தானில் சிறுவன் பாடம் படிக்காததால் புல் தின்ன வைத்த அவலம் – ஆசிரியர் மீது வழக்குப்பதிவு!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லோத்ரான் நகரில் உள்ள பதேபூர் என்ற இடத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஹமீத் ராசா என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார். அப்போது, கஸ்கான் (வயது 7) என்கிற சிறுவனை அழைத்து, சக மாணவர்கள் முன்பு நின்று பாடத்தை படிக்கும்படி கூறினார். ஆனால் சிறுவன் பாடத்தை படிக்காமல் நின்றுகொண்டிருந்தான். இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர் வகுப்பறைக்கு வெளியே இருந்து புல், பூண்டுகளை எடுத்து வந்து, கட்டாயப்படுத்தி சிறுவனை தின்ன வைத்தார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், சிறுவனின் பெற்றோர், ஆசிரியர் தங்களது உறவுக்காரர் என்றும், இதை தாங்கள் பெரிதுபடுத்தவில்லை என்றும் கூறிவிட்டனர். ஆனாலும் இந்த விவகாரம் மாவட்ட போலீஸ் அதிகாரியின் கவனத்துக்கு வந்ததும், இது குறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் பதேபூர் போலீசார் ஹமீத் ராசா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!