சிறிலங்கா தலைவர்களுடன் இன்று முக்கிய பேச்சுக்களில் ஈடுபடுகிறார் அவுஸ்ரேலிய அமைச்சர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலியாவின் உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன், இன்று சிறிலங்காவின் உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

நேற்று கொழும்பு வந்த அவுஸ்ரேலியாவின் உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன், இரண்டு அவுஸ்ரேலியர்கள் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட நீர்கொழும்பு கடுவாப்பிட்டிய தேவாலயத்துக்குச் சென்று, உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இன்று அவர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களையும் சந்திக்கவுள்ளார்.

சட்டவிரோத குடியேற்றவாசிகளின் பயணங்களைத் தடுப்பது குறித்து, அவரது இன்றைய சந்திப்புகளின் போது முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

அத்துடன் தீவிரவாத எதிர்ப்பு செயற்பாடுகள் குறித்தும் சிறிலங்கா அதிகாரிகளுடன் பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளதாக, அவுஸ்ரேலியாவின் உள்துறை அமைச்சரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பிராந்திய கடல் பாதுகாப்பு தொடர்பான தற்போதைய ஒத்துழைப்பை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!