சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெறவில்லை. அடுத்த அமைச்சரவைக் கூட்டத்துக்கு இன்னமும் நாள் குறிக்கப்படவில்லை என, அமைச்சரவை செயலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அமர்வை நிறுத்தும் வரை, அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று கடந்தவாரம் நடந்த அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
அமைச்சரவையின் தலைவராக சிறிலங்கா அதிபரே இருக்கிறார். அதிபர் செயலகத்திலேயே வழக்கமாக அமைச்சரவைக் கூட்டங்கள் இடம்பெற்று வந்தன.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தோறும் நடத்தப்படும் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடத்தப்படவில்லை.
நேற்று கூட்டம் நடத்தப்படாத நிலையில் அடுத்த அமைச்சரவைக் கூட்டம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படாமல் நிச்சயமற்ற நிலை தோன்றியுள்ளது.
அதேவேளை, சிறிலங்கா அதிபரின் எதிர்ப்புக்கு மத்தியில் நேற்று நாடாளுமன்றத் தெரிவுக்குழு சாட்சியங்களைப் பதிவு செய்தது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!