அப்பாவிகளைக் கொன்ற பயங்கரவாதத்தின் கோரமுகத்தை இலங்கையில் கண்டேன் – மோடி வேதனை

JAPAN-INDIA/
அண்மையில் இலங்கை விஜயம் செய்தபோது ஈஸ்டர் தினத்தன்று கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் கோரமுகத்தை காண முடிந்ததாக இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இருநாள் மாநாடு இன்று ஆரம்பமாகியது.

இந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாத தீமைகளில் இருந்து மக்களை காப்பாற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகள் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை இதன்போது மோடி சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட ஒரு சமுதாயம் உருவாக இந்தியா எப்போதுமே முன்னுரிமை அளித்து வருகின்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது கொழும்பு நகரில் உள்ள அந்தோணியார் தேவாலயத்தில் அப்பாவி மக்களின் உயிர்களை கொத்துக்கொத்தாக கொன்று குவித்த பயங்கரவாதத்தின் கோரமுகத்தை என்னால் காண முடிந்தது.

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும், துணைபுரியும், நிதியளித்து ஆதரிக்கும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்க ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்திய பயங்கரவாத ஒழிப்பு பிரிவு அக்கறை காட்ட வேண்டும் எனவும் மோடி வலியுறுத்தினார்.

இந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!