புடினுக்கு அழைப்பு விடுத்தார் சிறிலங்கா அதிபர் – அமெரிக்காவின் தடை குறித்தும் பேச்சு

ரஷ்யாவில் இருந்து சிறிலங்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் மீது, அமெரிக்கா விதித்துள்ள தடைகள் தொடர்பாக, சிறிலங்கா, ரஷ்ய அதிபர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் நடந்த ஐந்தாவது, ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் உச்சி மாநாட்டில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டின் பக்க நிகழ்வாகவே, நேற்று முன்தினம் இரு நாடுகளின் தலைவர்களும் சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவதில் கவனம் செலுத்தப்பட்டதுடன், பல்வேறு பிராந்திய விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

ரஷ்யாவில் இருந்து சிறிலங்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் மீது, அமெரிக்கா விதித்துள்ள தடைகள் தொடர்பாகவும், இந்த விடயத்தில் எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இரண்டு நாடுகளின் தலைவர்களும் ஆராய்ந்தனர்.

அத்துடன் ரஷ்ய அதிபரை கூடிய விரைவில் சிறிலங்காவுக்கு வருமாறும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!