வயநாடு தொகுதி எம்.பியாக பதவி ஏற்றபின் கையெழுத்திட மறந்த ராகுல் காந்தி

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவை குறிப்பேட்டில் கையெழுத்திட மறந்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 7 கட்டங்களாக நடைப்பெற்று முடிந்தது. இதில் இரண்டாவது முறையாக பாஜக அமோக வெற்றிப் பெற்றது.

இதனையடுத்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று காலை தொடங்கியது. மக்களவையின் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் புதிய எம்.பிக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த எம்.பிக்களும் இந்தி, ஆங்கிலம், போஜ்புரி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பதவி ஏற்றனர். நேற்று வயநாடு தொகுதியில் வெற்றிப் பெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அமேதி தொகுதியில் வெற்றிப் பெற்ற ஸ்மிரிதி இரானி ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்.பியாக பதவி ஏற்றார். பதவி ஏற்கும் எம்.பிக்கள் அவை குறிப்பேட்டில் கையெழுத்திட வேண்டும். ஆனால், ராகுல் காந்தி அதனை மறந்து வெளியேற முயன்றார்.

இதனையடுத்து அருகில் இருந்து இதனை கவனித்த பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ராகுலுக்கு நினைவுக் கூர்ந்தார். அதன்பின்னர் ராகுல் காந்தி கையெழுத்திட்டுச் சென்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!