முஸ்லீம்கள் தொடர்பான பௌத்தமதகுருவின் ஆபத்தான கருத்து- மங்கள கண்டனம்

முஸ்லீம்களை கல்லால் அடிக்கவேண்டுமென அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வராகொட ஞானரத்தன தேரர்வேண்டுகோள் விடுத்திருப்பதை கடுமையாக சாடியுள்ள நிதியமைச்சர் மங்களசமரவீர இது பௌத்தத்தை தலிபான்மயப்படுத்தும் நடவடிக்கை என விமர்சித்துள்ளார்.

மற்றொரு மனிதனை கல்லால் அடித்துக்கொலை செய்யுமாறு விடுக்கப்படும் வேண்டுகோளை எந்த பௌத்தராலும் ஏற்றுக்கொள்ள முடியாது மதகுருமார்கள் அந்த வேண்டுகோளை விடுத்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாதுஎனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அன்பு சமாதானம் ஆகிய எங்கள் உயர்தத்துவத்தை தலிபான்மயப்படுத்தும் முயற்சிகளிற்கு எதிராக உண்மையான பௌத்தர்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

முஸ்லீம் கடைகளிற்கு செல்லாதீர்கள் அவர்கள் வழங்கும் உணவை உட்கொள்ளாதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ள அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வராகொட ஞானரத்தின தேரர் முஸ்லீம்களிற்கு கல் எறியுமாறும் சிங்கள மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

அவரது பேச்சின் காணொலியுடன் கொழும்பு டெலிகிராவ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

நான் முஸ்லீம்களின் கடைகளிற்கு செல்லாதீர்கள் அவர்கள் வழங்கும் உணவை பெறாதீர்கள்,முஸ்லீம்கள் எங்கள் மீது அன்பு கொண்டிருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மகாநாயக்கர் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையை மீறும் செயல் என கொழும்புடெலிகிராவ் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!