அடிப்படைவாதப் பிரச்சினையை முழுமையாக இல்லாதொழிப்போம் – ஞானசார தேரர்

இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு முழுமையாகத் தீர்வு காண்பதற்குரிய ஒரு முறையான திட்டமிடலோ அல்லது இணக்கப்பாடோ இன்னமும் எட்டப்படவில்லை. எனவே இவை தொடர்பில் பகிரங்கமாகக் கலந்துரையாடுவதற்கும், யோசனைகளை முன்வைப்பதற்கும் அனைவரையும் கண்டிக்கு வருமாறு அழைக்கின்றோம் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

நாட்டில் தோன்றியுள்ள அடிப்படைவாதப் பிரச்சினையை முழுமையாக இல்லாதொழிப்பது குறித்து ஆராய்தல், யோசனைகளை முன்வைத்தல் என்பவற்றை நோக்காகக் கொண்டு பௌத்த தேரர்கள், பொதுமக்கள் அனைவரையும் இணைத்துக்கொண்டு எதிர்வரும் ஜுலை மாதம் 7 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு கண்டியில் மாநாடு ஒன்றை நடத்துவதற்கு பொதுபலசேனா அமைப்பு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கமளிக்கும் வகையில் நேற்று செவ்வாய்கிழமை கிருலப்பனையில் அமைந்துள்ள பொதுபலசேனா அமைப்பின் காரியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது அனைத்துத் துறைகளுமே மிக மோசமான நிலையை அடைந்திருக்கின்றன. மக்கள் தமது உரிமைகளுக்காகப் போராடி வருகிறார்கள். ஆனால் எந்தவொரு பிரச்சினைக்கும் முறையான நிரந்தர தீர்வு வழங்கப்படவில்லை. மேலும் தற்போது முஸ்லிம் அடிப்படைவாதப் பிரச்சினை முக்கியமானதாக மாறியிருக்கிறது. அதனை முழுமையாகக் களைவதற்கு பாரம்பரிய முஸ்லிம்கள் உட்பட சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அனைவருமே நல்ல மனிதர்கள். அவர்களிடம் நல்ல குணாதிசயங்கள் பல உள்ளன. ஆனாலும் இன்று முழு நாடும் நாசமடைந்து போய்விட்டதே. அரசியல்வாதிகள் தமது சொத்துக்கள், பாதுகாப்பு, தமது பிள்ளைகளின் எதிர்காலம் என்பன தொடர்பில் வெகு அக்கறையுடன் இருக்கிறார்கள்.

ஆனால் மக்களின் நல்வாழ்க்கை குறித்து அவர்கள் கருத்திற்கொள்ளவில்லை. இத்தகைய பின்னணியில் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு முழுமையாகத் தீர்வு காண்பதற்குரிய ஒரு முறையான திட்டமிடலோ அல்லது இணக்கப்பாடோ இன்னமும் எட்டப்படவில்லை. எனவே இவை தொடர்பில் பகிரங்கமாகக் கலந்துரையாடுவதற்கும், யோசனைகளை முன்வைப்பதற்கும் அனைவரையும் கண்டிக்கு வருமாறு அழைக்கின்றோம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!