அரசியல் பிரச்சாரத்திற்காகவே ஜனாதிபதி மரண தண்டணையினை கையிலெடுத்துள்ளார் – பாலசூரிய

அரசியல் பிரச்சாரத்திற்காகவே ஜனாதிபதி நான்கு வருடம் கடந்து மரண தண்டணையினை கையிலெடுத்துள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜுலையிற்கு தலைமை தாங்கி 30 வருட கால சிவில் யுத்தத்திற்கு வழிகோலிய ஐக்கிய தேசிய கட்சி இந்த மாத்தை வெள்ளை ஜுலையாக அறிமுகப்படுத்தியுள்ளமை நகைப்பிற்குரியது. கடந்த கால முறையற்ற செயற்பாடுகளை நாட்டு மக்கள் எவரும் மறக்கவில்லை. முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாதம் எதிர்தரப்பினரால் கட்டவிழ்த்து விடப்படுகின்றது என்று ஆளும் தரப்பினர் குறிப்பிட்டுக்கொண்டு முஸ்லிம் மக்களை எமக்கு எதிராக திசை திருப்பி விடும் முயற்சி களையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது.

ஐக்கிய தேசிய கட்சி இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவித்தே ஆட்சிக்கு வந்துள்ளது. தற்போது நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தினையே எதிர்பார்த்துள்ளார்கள். இந்நிலையில் இனங்களுக்கிடையில் பிரச்சினைகளை உருவாக்கி அதனூடாக ஆட்சிக்கும் வரும் செயற்பாடுகளையே ஐக்கியதேசிய கட்சி முன்னெடுக்கின்றது. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

மரண தண்டனை நிறைவேற்றம் என்பத சாத்தியமற்றது. மரண தண்டணைக்கு எதிரானவர்கள் போதைப்பொருள் ஒழிப்பிற்கு எதிரானவர்கள் என்று ஜனாதிபதி குறிப்பிடுகின்றமை பொருத்த மற்றது. போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டணை வழங்குவதால் பிரச்சினைகளுக்கு தீர்வை காண முடியாது.

அரசியல் பிரச்சாரத்திற்காகவே ஜனாதிபதி நான்கு வருடம் கடந்து மரண தண்டணையினை கையிலெடுத்துள்ளார். நீதித்துறைக்கு அனைவரும் கட்டுப்படவேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே மரண தண்டணை நிறைவேற்றத்திற்கு சட்டத்தின் ஊடாக தடைகள் ஏற்படுத்தப்படும் என்பதை ஜனாதிபதி நன்கு அறிவார். அனைத்தும் ஒரு பிரச்சினை யினை மறைப்பதற்கும், புதிய விடயம் பற்றி அரசியல் பேசுபொருளாக்குவதே இதன் முயற்சி என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!