மனைவியுடன் கைபேசியில் பேசியக் கணவனிடம் நிலவிய நிசப்தம்: பரோட்டா தொண்டையில் சிக்கியதால் பறிபோன உயிர்

திருமணமான ஆறே மாதங்களில் கணவனை பிரிந்த சம்பவமொன்று இந்தியா, கருவடிக்குப்பம் பாரதி நகரில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் புதுச்சேரி, கருவடிக்குப்பம் பாரதி நகரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவருக்கு வயது 35, இவர் கிருமாம்பாக்கத்தில் இயங்கிவரும் தனியார் கார் தொழிற்சாலை ஒன்றில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இவருக்கும் திருநெல்வேலியைச் சேர்ந்த சண்முகசுந்தரி என்ற பெண்ணுக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் சந்தோஷமாகவாழ்ந்து வந்துள்ளனர்.

சண்முகசுந்தரி தன் பெற்றோரைப் பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததால் அவரை கடந்த வாரம் திருநெல்வேலியில் விட்டுவிட்டு வந்தார் புருஷோத்தமன். புதிதாக திருமணம் ஆனவர்கள் என்பதால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் தன் மனைவியுடன் கைதொலைபேசியில் பேசுவது புருஷோத்தமனின் வழக்கம். இந்நிலையில், நேற்றிரவு புருஷோத்தமன் வேலைக்குச் சென்றுவிட்டு வரும்போது இரவு உணவுக்கு பரோட்டா வாங்கிவந்துள்ளார். வழக்கம்போல மனைவியுடன் பேசிக்கொண்டே சாப்பிட அமர்ந்திருக்கிறார்.

பரோட்டாவைப் பிய்த்து வாயில் வைத்ததும் புருஷோத்தமனுக்கு விக்கல் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து விக்கல் எடுத்துக்கொண்டே இருந்ததால் தண்ணீர் குடியுங்கள் என்று மறுமுனையில் மனைவி கூறியுள்ளார்.

ஆனால், அதன்பிறகு கணவரிடமிருந்து எந்தப் பதிலும் வராமல் நிசப்தம் நிலவியதால் பதறிப்போன சண்முகசுந்தரி, கைபேசி தொடர்பைத் துண்டித்துவிட்டு மீண்டும் கணவருக்குப் அழைப்பை ஏற்படுத்தியிருக்கிறார். ஆனால் அழைப்பை கணவன் ஏற்கவில்லை.இதில் அதிர்ச்சியடைந்ததுடன் உடனே அருகில் உள்ள உறவினருக்கு அழைப்பு செய்து உடனே தங்கள் வீட்டுக்குச் சென்று பார்க்கும்படி கூறியுள்ளார் மனைவி சண்முகசுந்தரி.

நிலைமையை உணர்ந்த அவர் உடனே புருஷோத்தமனின் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டியுள்ளார். ஆனால், உள்புறம் தாழிடப்பட்ட கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியே பார்த்திருக்கிறார்.

அப்போது புருஷோத்தமன் சாப்பாட்டுத் தட்டுக்கு அருகில் தரையில் படுத்திருந்தது தெரிந்தது. உடனே கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது பரோட்டா சாப்பிட்ட நிலையிலேயே மயங்கிக் கிடந்தார்.

உடனே அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த வைத்தியர்கள், அவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

பரோட்டா தொண்டையில் அடைத்துக்கொண்டதால் புருஷோத்தமன் உயிரிழந்திருக்கிறார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ள நிலையில், வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், திருமணமான 6 மாதத்திலேயே புருஷோத்தமன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, அவரின் இழப்பை ஏற்க முடியாமல் மனைவி பெரும் அதிர்ச்சியில் அழ்ந்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!