ஜனாதிபதி தற்பொழுது சலனபுத்தியோடு செயற்பட்டு வருகின்றார் ; மாவை

விடுதலைப்புலிகள் கொள்கைக்காகப் போராடினார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏப்ரல் 21தாக்குதலுக்குப் பின்னர் கூறினார்.அதே ஜனாதிபதி தற்போதுவிடுதலைப் புலிகள் போதைவஸ்துக்காரர்களுடன் தொடர்பு எனக்கூறுவது சலனபுத்தியோடு இருக்கிறார் என்பதே அர்த்தமாகும் இது கண்டிக்கத்தக்கது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலையே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

நம்பி வாக்களித்த மக்களுக்கு அரசியல் தவறுகளை இழைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துரோகம் செய்து வருகின்றார் தமிழீழ விடுதலைப் புலிகள் போதைப் பொருள் வியாபாரம் நடத்தி இனவிடுதலைப் போராட்டம் நடத்தினார்கள் என்று ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டதை நாங்கள் மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அவ்வாறு அந்த இயக்கம் தொடர்பில் கருத்துச் சொல்வதற்கு எந்தவிதமான அடிப்படையோ அல்லது ஆதாரமோ இல்லாமல் அவர் ஒரு சலன புத்தியோடு அப்படியான வார்த்தைகளை பாவித்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நாட்டில் நடைபெற்றதற்குப் பின்னர் ஜனாதிபதி தான் விடுதலைப் புலிகள் ஒரு கொள்கைக்காகப் போராடினார்கள் என்றும் அதனால் தான் மக்கள் அவர்களை ஆதரித்தார்கள் என்றும் கூறியிருந்தார். ஆனால் அப்படி நினைத்து அதைச் சொன்னவர் இனப்பிரச்சனைத் தீர்விற்காக ஒரு அடிகூட முன்னேற விடவில்லை.

இனப்பிரச்சனைக்கான தீர்வு உள்ளிட்ட நாட்டிலுள்ள முக்கியமான பல பிரச்சனைகளுக்கான தீர்விற்காக நாட்டிலுள்ள 68 இலட்சம் மக்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்த மக்களுக்கு கூட ஜனாதிபதி பெரும் தூரோகம் செய்திருக்கின்றார். இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வைக் காண தடுத்துவருதுவடன் சகலதையும் குழப்பி வருகின்றார்.

உண்மைக்கு மாறான அந்தக் கருத்தக்களை நாங்கள் எதிர்த்து நிற்கின்றோம். ஆகவே உண்மைக்கு மாறான இவ்வாறான சலனபுத்தியோடு கருத்தக்களை வெளியிடமாமல் இருப்பதே ஐனாதிபதிப் பதவிக்கு ஒரு சிறப்பை ஏற்படுத்தும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!