விக்னேஸ்வரன்- கஜேந்திரன் கூட்டணி அமைக்கும் முயற்சிகள் தோல்வி

புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கும் நோக்கில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும், தமிழ் மக்கள் கூட்டணிக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்தப்படவிருந்த பேச்சுக்கள் ரத்துச் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் நேற்று இந்தப் பேச்சுக்கள் நடக்கவிருந்தன.

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகளும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகளும் இந்தச் சந்திப்பில் பங்கேற்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்தப் பேச்சுக்களுக்கு அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர் முருகர் குணசிங்கம் ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.

சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எவ்வை ஒதுக்கி வைத்து விட்டு கூட்டணியை அமைக்க வேண்டும் என்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இந்த கூட்டணிப் பேச்சுக்களுக்கு முன்நிபந்தனை விதித்திருந்தது.

இதற்கு தமிழ் மக்கள் கூட்டணி இணக்கம் தெரிவித்த நிலையிலேயே பேச்சுக்களுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

எனினும், ஈபிஆர்எல்எவ்வை ஒதுக்கி விட்டு கூட்டணி அமைப்பதற்கு விரும்பவில்லை என்று நேற்றுமுன்தினம் மாலை, தமிழ் மக்கள் கூட்டணி தரப்பில் இருந்து அனுப்பப்பட்ட தகவலை அடுத்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இந்த பேச்சுக்களில் இருந்து விலகியுள்ளது.

இதனால், புதிய கூட்டணியை அமைக்கும் முயற்சிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!