இன்று 20 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!- மேலும் 100 ஏக்கர் வரை விடுவிக்க நடவடிக்கை.

இன்று சுமார் 20 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன என்றும், மேலும் 100 ஏக்கர் வரையான காணிகள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாகவும், வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுடனான விசேட கலந்துரையாடல் கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் வட்டக்கச்சி விவசாய பண்ணையில் இடம்பெற்றது. இதன்போது கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள், அவர்களின் தேவைப்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டதாக ஆளுநர் ஊடகங்களிற்கு தெரிவித்தார்.

இதன்போது காணி விடுவிப்புக்கள் தொடர்பில் அவரிடம் ஊடகவியலாளர்கள் வினவினர், அதற்கு அவர், உண்மையில் பல ஏக்கர் காணிகள் விடுவிப்பதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. இன்று 20 ஏக்கருக்கு அதிகமான காணி விடுவிக்கப்படவுள்ளது. அதேவேளை 100 ஏக்கர் காணி வரை விடுவிக்கப்படவுள்ளது. இவை அனைத்தையும் தனித் தனியாகவே செய்ய முடிகின்றது. இதற்கு அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு கிடைத்திருக்கவில்லை. அவர்கள் வெறுமனே காணிகள் விடுவிக்கப்படவில்லை என்ற கருத்துக்களை மாத்திரமே முன்வைத்து வருகின்றனர்.

மக்களின் காணிகள் மக்களிற்கு சென்றடைய வேண்டும். அதேபோன்று அரச திணைக்களங்களின் காணிகளும் உரிய முறைப்படி பயன்பாட்டிற்காக விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் உள்ளேன்.

பூநகரியில் உள்ள மரமுந்திரிகை தோட்ட காணி பயன்பாடு தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது, அதனை கூட்டுறவு முறையிலான பயன்பாட்டிற்காக பகிர்ந்தளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த காணியும் விடுவிக்கப்பட்டு அவ்வாறான பயன்பாட்டிற்காக கையளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!