உயர்மட்ட புலனாய்வு அதிகாரிகளின் சாட்சியம் ஜூலை 24இற்கு ஒத்திவைப்பு

அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் உள்ளிட்ட உயர்மட்ட காவல்துறை அதிகாரிகளை நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன் சாட்சியமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அமர்வு வரும் ஜூலை 24ஆம் நாள் இடம்பெறும் போதே, இவர்களை முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச புலனாய்வு சேவையின் தலைவரான பிரதி காவல்துறை மா அதிபர் நிலந்த ஜெயவர்த்தன, குற்ற விசாரணைத் திணைக்களத்தின் பணிப்பாளரான சானி அபேசேகர, குற்ற விசாரணைத் திணைக்களத்தைச் சேர்ந்த மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் ரவி செனிவிரத்ன, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் வருண ஜெயசுந்தர, பயங்கரவாத விசாரணைப் பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர் தரங்க பத்திரன ஆகியோருக்கே சாட்சியமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவுக்குழு தலைவர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.

முன்னதாக இவர்களை இன்று தெரிவுக்குழுவின் முன்பாக சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட போதும், இவர்களில் பலர் வெளிநாடு சென்றுள்ளதாலும், சிலருக்கு தேசிய காவல்துறை ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டியுள்ளதாலும், ஜூலை 24ஆம் நாளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

அன்றைய விசாரணைகளில் பெரும்பாலும் ஊடகங்கள் அனுமதிக்கப்படாது என்றும், எனினும், ஊடகங்களுக்கு ஒலிப்பதிவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!