ஐதேக உறுப்பினரே இம்முறை வேட்பாளர்!

2010 மற்றும் 2015 ஜனாதிபதித் தேர்தல்களில் வெளியிலிருந்தே வேட்பாளர்கள் கொண்டுவரப்பட்டனர். எனினும், இம்முறை ஐ.தே.கவின் அல்லது ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினரே வேட்பாளராக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை நாம் ஏற்கனவே தீர்மானித்துவிட்டோம். ஐ.தே.கவில் பல சேவையாளர்கள் இருக்கின்றனர். இவர்களில் நாட்டுக்கு சிறந்து சேவையாற்றக் கூடிய ஒருவர் அறிவிக்கப்படுவார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஊடகங்கள் அமைச்சரிடம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே இதனைக் கூறினார்.

ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடக் கூடியவர்கள் எனப் பெயரிடப்படும் நபர்கள் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் அல்லது ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்புரிமையைக் கொண்டவர்கள். எனினும், பொது ஜன பெரமுனையில் போட்டியிடலாம் எனக் கூறப்படும் அனைவரும் ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள். இந்த ராஜபக்‌ஷ, அந்த ராஜபக்‌ஷ எனக் கூறப்பட்டாலும் சகலரும் ஒரே குடும்பந்தைச் சேர்ந்தவர்கள். அக்குடும்பத்தைத் தவிர வெளியாட்கள் எவரும் இதில் இல்லை என்றார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுபவர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதை நான் இந்த வருட ஆரம்பத்திலேயே வலியுறுத்தினேன். 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றில் வெளியாட்களை நிறுத்தினோம். சரத்பொன்சேகா பின்னர் எம்முடன் இணைந்துகொண்டார். இவ்வாறான நிலையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியைச் சேர்ந்த ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் என அடிமட்டத்தில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களின் கோரிக்கையாக உள்ளது. அவர்களின் இந்தக் கோரிக்கை நியாயமானது என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!