முற்றுகைக்குத் தயாராகும் பிக்குகள்!

பௌத்த பிக்குகளுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் காணொளியையும் கருத்துக்களையும் வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை இரண்டு நாட்களுக்குள் கைது செய்யாவிட்டால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவை முற்றுகையிடுவோம் என பௌத்த பேரினவாத அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, இலங்கையில் இனவாதத்தை பரப்பி வன்முறைகளில் ஈடுபடும் பௌத்த பிக்குகள் அனைவரும் சிறு வயதில் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளானவர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

குறிப்பாக பௌத்த விகாரைகளிலேயே இந்த பௌத்த பிக்குகள் சிறு வயதிலேயே பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இராஜாங்க அமைச்சரின் இந்த கருத்தினால் கடும் ஆத்திரத்திற்கு உள்ளாகியிருக்கும் பௌத்த பேரினவாத அமைப்புக்கள் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சிங்கள ராவய, ராவண பலய, சிங்கலே ஆகியவற்றின் தலைமைப் பிக்குகள் பொலிஸ் தலைமையகத்திற்கு நேற்றுக் காலை நேரில் சென்று இராஜாங்க அமைச்சருக்கு எதிராக முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளனர்.

இந்த முறைப்பாட்டினைப் பெற்றுக்கொள்வதற்காக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தலைமையிலான அதிகாரிகள் பொலிஸ் தலைமையகத்திற்கு வெளியே வந்து தலைமைப் பிக்குமார்களை சந்தித்து முறைப்பாட்டினை பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையிலேயே, இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்வதற்கு இரண்டு நாள் கால அவகாசம் வழங்கி, பௌத்த பேரினவாத அமைப்புக்கள் பொலிஸார் முன்னிலையில் எச்சரிக்கை விடுத்துள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!