சிறிலங்காவில் தளம் அமைக்கும் நோக்கம் இல்லை – அமெரிக்கா

சிறிலங்காவில் இராணுவத் தளம் எதையும் அமைக்கும் நோக்கம் அமெரிக்காவுக்குக் கிடையாது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஒருவர்,

“சிறிலங்காவுக்கும், அமெரிக்காவுக்கும் நன்மையளிக்கக் கூடிய வகையில், பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்துவதன் மூலம், இந்தியப் பெருங்கடலில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதே எமது நோக்கம்.

வருகைப் படைகள் உடன்பாட்டை புதுப்பித்துக் கொள்வதானது, மனிதாபிமான உதவி, இடர் மீட்பு உள்ளிட்ட விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான ஆதரவை அளிப்பதற்கும், இந்தியப் பெருங்கடலில் பகிரப்பட்ட முன்னுரிமைகளுக்குமான வசதிகளை வழங்கும்.

அமெரிக்க படைத் தளத்தை அமைப்பதோ, அங்கு நிரந்தரமான இராணுவ பிரசன்னத்தை கொண்டிருப்பதே எமது நோக்கம் அல்ல.

1995ஆம் ஆண்டு பரிமாறிக் கொள்ளப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், சில புதிய வசதிகளுடன் வருகைப் படைகளை உடன்பாட்டை புதுப்பித்துக் கொள்ளும் பேச்சுக்களே நடந்து வருகின்றன” என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!