திருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால் மணப்பெண்ணை கற்பழித்து கொன்றேன்- புதுமாப்பிள்ளை வாக்குமூலம்

பண்ருட்டி அருகே திருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால் மணப்பெண்ணை கற்பழித்து கொலை செய்தேன் என்று போலீசாரிடம் புதுமாப்பிள்ளை வாக்குமூலம் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள நல்லூர்பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 25). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

பண்ருட்டியை அடுத்த வாணியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டபாணி. இவரது மகள் ரம்யா (23). இவருக்கும், விஜயகுமாருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்களது திருமணம் வருகிற 20-ந் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து இருவீட்டாரும் திருமண பத்திரிகை அச்சடித்து உறவினர்களுக்கு கொடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி வீட்டில் இருந்த ரம்யா திடீரென்று காணாமல் போனார். இதனால் கவலையடைந்த கோதண்டபாணி தனது மகளை பல இடங்களில் தேடிப்பார்த்தார். எங்கும் அவரை காணவில்லை.

இதனை தொடர்ந்து அவர் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ரம்யாவை தேடி வந்தனர்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இருந்தை கிராமத்தில் உள்ள விவசாயி கிணற்றில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில், கிணற்றில் பிணமாக கிடந்த பெண் மாயமான ரம்யா என்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் ரம்யாவை, விஜயகுமார் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றதும் தெரிய வந்தது. உடனே போலீசார் விஜயகுமாரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் ரம்யாவை கற்பழித்து கிணற்றில் வீசி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர்.

போலீசாரிடம் விஜயகுமார் கொடுத்த வாக்கு மூலம் வருமாறு:-

நான் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன். எனக்கும், ரம்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

எங்களது திருமணம் 20-ந் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது. திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்ததும் ரம்யாவுடன் நான் செல்போனில் அடிக்கடி பேசி வந்தேன். அப்போது அவரது செல்போன் பெரும்பாலும் பிசியாக இருந்து வந்தது.

இது தொடர்பாக அவரிடம் கேட்டேன். அப்போது அவரது செல்போன் பழுதாகி இருப்பதாக கூறினார். இதைத் தொடர்ந்து அவருக்கு புதிய செல்போன் வாங்கி கொடுத்தேன். அதன் பின்னரும் ரம்யாவின் செல்போன் அடிக்கடி பிசியாக இருந்தது. யாரிடம் பேசி கொண்டு இருக்கிறாய்? என்று கேட்டதற்கு உறவினர்களிடம் பேசியதாக கூறினார். இதனால் அவர் மேல் சந்தேகம் அடைந்தேன்.

கடந்த 13-ந் தேதி இரவு ரம்யாவுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். நாம் தனிமையில் சந்தித்து பேச வேண்டும் என்று கூறி அழைத்தேன். வீட்டில் யாருக்கும் தெரியாமல் ரம்யா வெளியே வந்தார். மோட்டார் சைக்கிளில் ரம்யாவை அழைத்துச் சென்றேன்.

இருந்தையில் உள்ள விளை நிலத்துக்கு சென்றோம். அப்போது அங்கு நாங்கள் 2 பேரும் பேசி கொண்டிருந்தோம். அப்போது நாம் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறினேன். அதற்கு ரம்யா மறுத்து விட்டார். இதனால் எங்களுக்குள் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த நான், ரம்யாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தேன். இதில் அவர் மயங்கி விழுந்தார். மயக்க நிலையில் இருந்த ரம்யாவை கற்பழித்தேன்.

இதையடுத்து அருகில் உள்ள கிணற்றுக்கு ரம்யாவை தூக்கி சென்றேன். பின்னர் அவளை கிணற்றில் தூக்கிப் போட்டேன். சிறிது நேரத்தில் ரம்யா இறந்து விட்டார். இதையறிந்ததும் நான் ஒன்றும் தெரியாதது போல் எனது வீட்டுக்கு சென்று விட்டேன். ஆனால், போலீசார் நடத்திய விசாரணையில் நான் சிக்கி கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கைதான விஜயகுமாரை போலீசார் திருக்கோவிலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து விஜயகுமார் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!