யாழ்ப்பாணம், மானிப்பாய் -இணுவில் வீதியில் ஆவா குழு உறுப்பினர் எனக் கூறப்படும் இளைஞன் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் பல தகவல்கள் வெளிப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆவா குழுவில் இருந்து விலகிச் சென்ற கொலின் குழு எனப்படும் மற்றொரு குழுவின் தலைவன் மீது தாக்குதல் நடத்தவே இணுவில் பகுதிக்கு மூன்று மோட்டார் சைக்கிள்களில் இவர்கள் வந்துள்ளதாக இதுவரையிலான விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களில் இருந்து சந்தேகிப்பதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
இந் நிலையில் மானிப்பாய் சம்பவம் தொடர்பில் கொல்லப்பட்ட ஆவா குழு உறுப்பினருடன் அப்பகுதிக்கு வந்து, பொலிஸ் துப்பாக்கிச் சூட்டை அடுத்து, தப்பியோடிய 5 ஆவா குழு உறுப்பினர்களில் இருவரை நேற்று மாலை பொலிஸார் அடையாளம் கண்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.
அடையாளம் காணப்பட்டோரைக் கைது செய்யவும் ஏனையோரை அடையாளம் காணவும் விஷேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இவ்வருடத்தில் நேற்று வரையிலான காலப்பகுதிக்குள் மட்டும் யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 27 ஆவா குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டினார்.
இதனிடையே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் இருந்து குறித்த மோட்டார் சைக்கிளுக்கு மேலதிகமாக 2 வாள்கள், மேலும் இரு கூரிய ஆயுதங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளின் இலக்கத்தகடும் போலியானது என ஆரம்பகட்ட விசாரணைகளில் பொலிசார் கண்டறிந்துள்ளனர். சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற ஆவா உறுப்பினர் ஒருவரினுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பணப் பை ஒன்றையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
மீள தலை தூக்கும் ஆவா குழுவை ஒடுக்கவும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்யவும் வடக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி விஜேகுணவர்தனவின் ஆலோசனைக்கு அமைய மானிப்பாய், கோப்பாய் மற்றும் கொடிகாமம் பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கி நான்கு விஷேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!