கல்முனை தேரருடன் விக்கி சந்திப்பு!

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்துக் கலந்துரையாடினார்.

அம்பாறை மாவட்டத்திற்கு நேற்று விஜயம் செய்த சி.வி.விக்னேஸ்வரன் கல்முனையில் அமைந்துள்ள சுபத்திரா ராமய விகாரை வளாகத்தில் தேரரை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், சிங்கள மகா வித்தியாலய நிலைமை தற்போது மோசமாக இருப்பதாக கூறியதுடன் கிழக்கில் விதவை பெண்களின் வாழ்வாதாரம் இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை கல்முனை உப பிரதேச செயலக பிரச்சினைகள் உள்ளிட்டவைகளை ஆழமான விளக்கத்துடன் முன்வைத்தார்.

சங்கரத்ன தேரர் நன்றாகத் தமிழ் பேசக் கூடியவர் என்ற வகையில் இப்பகுதி மக்களின் பிரச்சினைகளை ஆழமாக புரிந்து கொண்டுள்ளதை வரவேற்பதாக விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

மேலும் அப்பகுதி மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டதுடன் எதிர்காலத்தில் சகல வளங்களுடன் அப்பிரதேசங்களை அபிவிருத்தி அடைய முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!