3 மிக முக்கிய பிரமுகர்களுக்கு 2245 சிறப்பு அதிரடிப்படையினர் பாதுகாப்பு

கொழும்பில் நிறுத்தப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப்படையின் பெரும்பாலான கொமாண்டோக்கள், மிக முக்கிய பிரமுகர்கள் மூவரின் பாதுகாப்புக்கே பயன்படுத்தப்படுவதாக, சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி எம்.ஆர்.லத்தீப் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக நேற்று சாட்சியம் அளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

நேற்றைய விசாரணைகளின் போது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர்,

“கொழும்பில் 3137 சிறப்பு அதிரடிப்படையினர் நிலைகொண்டுள்ளனர். அவர்களில் 2245 பேர் மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.” என்று கூறினார்.

மூன்று மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புக்கு 2245 சிறப்பு அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனரா என்று சரத் பொன்சேகா மீண்டும் கேள்வி எழுப்பிய போது, ஆம் என்று சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பதிலளித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!