பாக்கிஸ்தானில் பொதுமக்கள் குடியிருப்பின் மீது விழுந்து நொருங்கியது இராணுவவிமானம்- 17 பேர் பலி

பாக்கிஸ்தானில் பொதுமக்களின் குடியிருப்பொன்றின் மீது சிறிய இராணுவவிமானமொன்று விழுந்து நொருங்கியதில் 17 பேர் பலியாகியுள்ளனர்.

பாக்கிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விமானம் விழுந்து நொருங்கியதில் 12 பொதுமக்கள் உட்பட 17 பேர் பலியாகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வழமையான பயிற்சி நடவடிக்கையின் போது இந்த விபத்து இடம்பெற்றதாகவும் விமானம் விழுந்து நொருங்கியதில் பல வீடுகள் தீப்பிடித்து எரிந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் விமானவிபத்திற்கு என்ன காரணம் என்பது குறித்தோ விழுந்து நொருங்கிய விமானம் குறித்தோ மேலதிக விபரங்கள் வெளியாகவில்லை.

பாக்கிஸ்தான் இராணுவத்தின் தலைமையகம் ராவல்பிண்டி நகரிலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டிடமொன்றில் விமானம் மோதியதாகவும் அந்த கட்டிடம் உடனடியாக இடிந்து விழுந்தது எனவும் சம்பவத்தை நேரில் பார்த்தஇராணுவஅதிகாரியொருவர் ரொய்ட்டர் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் இடம்பெற்ற பின்னர் கதறியபடியும் அழுதபடியும் மக்கள் அந்த இடத்தில் கூடியுள்ளனர் என ஏஏவ்பி தெரிவித்துள்ளது.

நான் பாரிய வெடிப்பு சத்தத்தை கேட்டு கண்விழித்தேன் என பகுதியை சேர்ந்த முகமட் சாதிக் தெரிவித்துள்ளார்.

மக்கள் அலறிக்கொண்டிருந்தனர் நாங்கள் அவர்களிற்கு உதவ முயன்றோம் ஆனால் தீ பாரியதாகவும் அருகில் நெருங்க முடியாததாகவும் காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முதலில் தீப்பிடித்து எரிந்த பின்னரே விமானம் விழுந்து நொருங்கியது என அப்பகுதியை சேர்ந்த மற்றொருவர் தெரிவித்துள்ளார்.

விமானத்திலிருந்து இன்னமும் புகை வெளியாகியவண்ணமும் உள்ளது அதன் பாகங்கள் கூரையில் சிதறிக்காணப்படுகின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!