இந்தோனேசிய ஏக் மாகாணத்தில் திருமணத்துக்கு முன்னரான காதல் தொடர்பை வைத்திருந்ததாக குற்றச்சாட்டுக்குள்ளான 22 வயது யுவதியொருவர் உட்பட மூவருக்கு பொது இடத்தில் பிரம்பால் அடித்து நேற்று முன்தினம் புதன்கிழமை தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேற்படி யுவதிக்கும் ஏனைய இரு ஆண்களுக்கும் மாகாண தலைநகர் பண்டா ஏக்கிலிருந்து சுமார் 170 கிலோமீற்றர் தொலைவில் லஹொசியுமாவி எனும் இடத்திலுள்ள மைதானத்தில் வைத்து தலா 100 பிரம்படிகள் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தண்டனை விதிப்புக்குள்ளான ஆண்களில் குறிப்பிட்ட யுவதியின் காதலரான 22 வயது இளைஞர் மற்றும் பராயமடையாத சிறுமியுடன் தகாத உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த 19 வயது இளைஞன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
பிரம்படி தண்டனை நிறைவேற்றப்பட்டபோது அந்த யுவதி வேதனை தாங்காது கதறி அழுதுள்ளார். இந்த தண்டனை நிறைவேற்றத்தை பெருமளவான பொதுமக்கள் கூடியிருந்து அவதானித்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்தத் தண்டனை நிறைவேற்றத்தைப் பார்க்க சிறுவர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை என பிராந்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேற்படி தண்டனை நிறைவேற்றத்தையடுத்து யுவதிக்கும் அவரது காதலருக்கும் வீடு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது.
ஆனால் 19 வயது இளைஞன் பிரம்படித் தண்டனை நிறைவேற்றத்தையடுத்து 5 வருட சிறைத்தண்டனையை அனுபவிக்கும் முகமாக சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். இதன்போது அவனது வெள்ளை நிற மேலாடை குருதியால் நனைந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!