நாகை அருகே புதுமாப்பிள்ளை வி‌ஷம் குடித்து தற்கொலை

ஆடிக்கு தாய் வீட்டுக்கு சென்ற மனைவி காதலனுடன் ஓட்டம் பிடித்ததால் மனமுடைந்த புதுமாப்பிள்ளை வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நாகை மாவட்டம் நாகூரை அடுத்த அருவிழ மங்கலம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் பாக்கியராஜ் (வயது 35), விவசாயி.

இவருக்கும் திருவாரூர் மாவட்டம் நாககுடி கிராமத்தை சேர்ந்த கவுசல்யா (19) என்பவருக்கும் கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு முன்பு கவுசல்யாவும் ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பாக்கிய ராஜிக்கு கவுசல்யாவை திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து உள்ளனர். ஆனால் இந்த திருமணத்திற்கு கவுசல்யா விருப்பமில்லை என்று தெரிகிறது. தனது முடிவை அவர் பெற்றோரிடம் தெரிவித்தார்.ஆனால் இந்த காதல் திருமணத்தை அவரது பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளாமல் பாக்கியராஜிக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இந்த நிலையில் ஆடி மாதத்தையொட்டி கவுசல்யாவை அவரது பெற்றோர் தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். தாய் வீட்டுக்கு சென்ற கவுசல்யா தனது காதலனை சந்தித்து பேசியுள்ளார் .

அப்போது இருவரும் சேர்ந்து வாழ்வது என்று முடிவு செய்து உள்ளனர்.

இதைத்தொடந்து இருவரும் தங்கள் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடி விட்டனர்.

தனது மனைவி காதலனுடன் சென்றதை அறிந்த பாக்கியராஜ் மிகுந்த அவமானமும் வேதனையும் அடைந்தார்.

இதனால் வீட்டில் இருந்த வயல் தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாக்கியராஜ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

திருமணமான 40வது நாளில் மனைவி காதலனுடன் சென்றதால் புதுமாப்பிள்ளை வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!