13 புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தன!

சட்டம் ஒழுங்கு அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் பாதுகாப்பு தரப்புக்களிடமிருந்து ஐ.எஸ் அமைப்பு தொடர்பாக 13 புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தன. அவற்றில் சிங்கள – முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் பற்றிய ஆறு தகவல்கள் கிடைக்கப் பெற்றிருந்தாக அமைச்சர் சாகல ரத்நாயக்க பாராளுமன்ற மன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவு முன்னிலையில் நேற்று சாட்சியமளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

அரச புலனாய்வு பிரிவு எனக்கு தகவல் கூறுவதில்லை அவர்கள் பாதுகாப்பு அமைச்சுக்கே அறிவிப்பர். ஆனால் சட்டம் ஒழுங்கு தொடர்பாக நான் எனது காலப்பகுதியில் 407 புலனாய்வு தொடர்பான கடிதங்கள் கிடைத்துள்ளன. தொலைபேசி மூலமும் எனக்கு அறிவுறுத்தி உள்ளனர். அவ்வாறான நிலையில் தான் ஐ.எஸ் அமைப்பு பற்றி 13 புலனாய்வு தகவல்கள் கிடைத்தன.

அவற்றில், ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இந்தியர்கள் இலங்கையில் வசிப்பது, ஐ.எஸ் அமைப்பு வெளிநாடுகளில் நடத்தும் தாக்கதல்கள், ஐ.எஸ் அமைப்பு வெளியிட ஆரம்பித்துள்ள சஞ்சிகை, இலங்கையிலிருந்து அந்த அமைப்பின் வலைத்தளங்களை தேடுபவர்கள் பற்றிய தகவல்கள் ஆகியனவும், 2016 ஆண்டில், முதல் முறையாக தேசிய தௌஹித் ஜமாஅத் அமைப்பு ஐ.எஸ். அமைப்பின் கொள்கைகளை நியாயப்படுத்தி வருவதாகவும் தகவல் கிடைத்தது.

அதன் பின்னர் ஐ.எஸ் அமைப்பினால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படலாம் என கருதும் நெருக்கடிகள் பற்றியும், அந்த அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க தயாராக வேண்டும் என்றும், 14.07.2014 அன்று நடந்த பாதுகாப்பு சபை கூட்டத்தில் அறிவுருத்தியும் இருக்கிறேன். அதேபோல் 2018 ஆம் ஆணடில் மத நல்லிணக்கம் பற்றிய 400 மேற்பட்ட நிகழவுகள் நடத்தப்பட்டுள்ளன. அதனையடுத்து புலனாய்வு தகவல்களை பறிமாற்றல், வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகளிடத்திலிருந்து தாக்குதல்களை பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலான பத்திரம் ஒன்றும் தயாரிக்கபட்டது.

2016 ஆம் ஆண்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவில் மத அடிப்படைவாதம் பற்றிய தனியான பிரிவொன்றை அமைத்து, சஹரான் பற்றி பேஸ்புக் மூலம் தேடிப்பார்க்குமாறும் அறிவுரைக்கப்பட்டது என்றும் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!