முடிவின்றி முடிந்த பேச்சு – வாக்கெடுப்பு நடத்துமாறு கோரும் சஜித் அணி

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று முன்தினம் நடந்த பேச்சு முடிவுகள் ஏதுமின்றி முடிந்ததாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

அலரி மாளிகையில் நேற்று முன்தினம் இரவு மூடிய அறைக்குள், ரணில் விக்ரமசிங்கவும், சஜித் பிரேமதாசவும் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.

இதன்போது, அதிபர் தேர்தலில் போட்டியிடத் தாம் விரும்புவதாக ரணில் விக்ரமசிங்க கூறினார்.

சஜித் பிரேமதாச, தாமும் போட்டியிட விரும்புவதாகவும் கட்சியில் பெரும்பாலானோர் தாம் போட்டியிடுவதையே விரும்புகின்றனர் என்றும் கூறியதாக ஒரு தகவல் கூறுகிறது.

எனினும், இந்தச் சந்திப்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என, கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், கட்சியின் நாடாளுமன்றக் குழு மற்றும் செயற்குழுவில், அதிபர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்துமாறு ரணில் விக்ரமசிங்கவிடம் கோருவதற்கு, சஜித் பிரேமதாச ஆதரவாளர்கள் தீர்மானித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!