சட்டம் ஒழுங்கு அமைச்சு நிலையான அமைச்சாக இருக்க வேண்டும். அதன் செயலாளரும் நிலையான ஒருவராக இருக்க வேண்டும். பகுதி நேர வேலையாக சட்டம் ஒழுங்கு அமைச்சை பார்க்கக் கூடாது. அதேபோன்று சஹ்ரான் அமைப்பினர் முதலில் மத அடிப்படைவாதிகள் என்ற நிலையில் தான் கூறப்பட்டனர். நோக்கம் வேறாக இருந்தாலும் அவர்கள் பயங்கரவாதிகள் என காட்டிக் கொள்ளவில்லை. அதனால் அதிக முக்கியத்துவம் வழங்காமல் செயற்பட்டிருக்கலாம் என அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார சாட்சியமளித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட விசேட தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை சாட்சியமளிக்க வந்திருந்த போதே அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இவற்றைக் கூறினார். அவரின் சாட்சியம் வருமாறு:
கேள்வி :- சட்டம் ஒழுங்கு அமைச்சராக நீங்கள் சிறிது காலம் கடமையாற்றினீர்கள். இந்தக் காலத்தில் உங்களிடமும் சில தகவல் கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது. புலனாய்வுத் துறையும் சில தகவல்களை வழங்கியதாகக் கூறினர். அது குறித்து தெரிவிக்க முடியுமா?
பதில் :- சட்டம் ஒழுங்கு அமைச்சராக 2018 மார்ச் 8 தொடக்கம் ஒக்டோபர் 25ஆம் திகதி வரையில் பதவியில் இருந்தேன். இதன்போது நாட்டின் நிலைமைகள், பயங்கரவாத செயற்பாடுகள் கிழக்கில் முஸ்லிம் பள்ளிவாசல் பிரச்சினை குறித்தும் பேசினோம். அரச புலனாய்வு அதிகாரி மூலமாகவும் பொலிஸ் மூலமும் நாளாந்த அறிக்கை கிடைக்கும். அவற்றை ஆராய்வது எனது கடமையாகும். 2015ஆம் ஆண்டு ஐ.எஸ் அமைப்பு குறித்து இரண்டு அறிக்கைகள் கிடைத்தன. தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைமைகள் மற்றும் சமூக ஊடகங்களில் அவர்கள் கொண்டுசெல்லும் பிரசாரங்கள் குறித்தும் அவர்களின் மத போதனைகள் குறித்தும் அறிவிக்கப்பட்டது.
அதற்கு முன்னரும் எனது அதிகாரிகள் மூலமாக ஐ.எஸ். அமைப்பில் தொடர்புகொண்ட நிலாம் என்ற நபர் குறித்து அறியத்தந்தனர். அவர் சிரியா சென்று போராடி இறந்தார் என்பது குறித்தும் கூறினர். சஹ்ரான் என்ற நபர் பள்ளிவாசல் இரண்டின் மோதல் விடயத்தில் பிடியாணை விடுக்கப்பட்டும் அவர் பிடிபடவில்லை. அதற்குப் பின்னரும் இன்னொரு பிடியாணை விடுக்கப்பட்டிருந்தது. அவரது பிரதேசங்களில் தேடியும் நபர் கிடைக்கவில்லை. இந்தக் காரணிகள் குறித்து அறிந்திருந்தேன். அதன் பின்னர் எனது அமைச்சு மாற்றப்பட்டது.
கேள்வி:- ஏழு மாத காலமாக நீங்கள் அமைச்சராக இருந்தீர்கள்…
பதில்:- ஆம்
கேள்வி:- அரச புலனாய்வு மூலம் எவ்வாறான தகவல் கிடைத்தது?
பதில்:- இந்த அமைப்பு சர்வதேச மட்டத்தில் செயற்பட்ட ஒன்றாகவும், சஹ்ரான் என்ற நபர் செய்த செயற்பாடுகள் குறித்தும் முறையிடப்பட்டது. இனக் கலவரத்தை எவ்வாறு அவர் மதச் செயற்பாடுகள் மூலமாகச் செய்கின்றார் என்றும் கூறப்பட்டது.
கேள்வி:- அரச புலனாய்வு உங்களின் கீழ் இல்லையே…
பதில்:- ஆம்
கேள்வி:- பாதுகாப்பு அமைச்சின் கீழ் தானே உள்ளது?
பதில்:- ஆம்
கேள்வி:- அல்கைதா அமைப்பு குறித்த விசாரணை ஒன்றை நிறுத்த உங்களுக்கு ஏதும் கடிதம் வந்ததா?
பதில்:- இல்லை எனக்கு அவ்வாறு ஒன்றும் வரவில்லை.
கேள்வி:- பாதுகாப்பு அமைச்சின் கூட்டங்களுக்குச் சென்றுள்ளீர்களா?
பதில் :- ஆம். சென்றுள்ளேன்.
கேள்வி:- சட்டம் ஒழுங்கு அமைச்சு மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதில் நிரந்தர அமைச்சர், செயலாளர் இருக்க வேண்டும். பகுதி நேர வேலையாக இதனை பார்க்க முடியாது. நான் அமைச்சராக இருந்து சரியாக செயற்பட்டுள்ளேன். காத்தான்குடி குறித்து தொடர்ச்சியாக ஆராய்ந்துள்ளேன். சஹ்ரான் முதலில் மத ரீதியில் பயணித்து பின்னரே பயங்கரவாதத்தின் பக்கம் வந்துள்ளார். முதலில் அல்லாஹ் வின் பெயரால் என பல காரணிகளை முன்வைத்துள்ளார். பின்னரே பயங்கரவாதச் செயற்பாடுகளில் சென்றுள்ளார்.
கேள்வி:- நீங்கள் அமைச்சராக இருந்த காலத்தில் இறுதி நேரத்தில் பல சம்பவங்கள் இடம்பெற்றன. உங்களுக்கு ஏதும் காரணிகள் அறிவிக்கப்பட்டனவா?
பதில்:- ஆம் அதனால் தானே அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இன்னமும் ஆழமாக ஆராய்ந்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். இந்த விசாரணை செய்த பொலிஸ் அதிகாரியும் வேறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்டார்.
கேள்வி:- நிசாந்த சில்வாவின் இடமாற்றம் குறித்து பாதுகாப்பு கூட்டத்தில் பேசப்பட்டது தானே?
பதில்:- அவரது இடமாற்றம் பின்னர் நிறுத்தப்பட்டது. இது குறித்துப் பேசி ஒரு சில நாட்களில் அரசாங்கம் மாறிவிட்டது.
கேள்வி:- ஐ.சி.சி.பி.ஆர்.இன் கீழ் கைதுகள் இடம்பெற்றனவா?
பதில்:- ஆம். திகன சம்பவத்தில் சிலர் கைது செய்யப்பட்டனர்.
கேள்வி :- ஐ.சி.சி.பி.ஆர்.இன் கீழ் பொலிஸார் கைது செய்யப்பட்டது இது முதல் தடவையா?
பதில் :- இதற்கு முன்னர் இருந்ததா என்று எனக்குத் தெரியாது.
கேள்வி:- சட்டம் ஒழுங்கு அமைச்சருக்கு அந்தத் துறை குறித்து கூடிய அறிவு இருந்தால் நல்லது என நினைக்கிறீர்களா?
பதில்:- அப்படி அல்ல, அனைவரும் அனைத்தையும் அறிந்துகொண்டு இருக்க முடியாதே. உரிய அதிகாரிகளைக் கொண்டு செயற்பட வேண்டும். அது போதுமானது. ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படுபவர் அனைத்தையும் தெரிந்துகொண்டா தெரிவாகின்றார்? அது போன்று தான் அனைத்துமே உள்ளன.
கேள்வி:- சஹ்ரான் குறித்து உங்களின் அமைச்சுக் காலத்திலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குண்டுதாரிகளில் ஒருவர் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:- முதலில் இவர்கள் மத அடிப்படைவாதிகள் என்ற நிலையில் தான் கூறப்பட்டனர். நோக்கம் வேறாக இருந்தாலும் அவர்கள் பயங்கரவாதிகள் எனக் காட்டிக்கொள்ளவில்லை.
கேள்வி:-முஸ்லிம் பயங்கரவாதமும் முஸ்லிம் அடிப்படைவாதமும் ஒன்றாகவே பயணிக்கும். இதனை அறிந்துகொள்ளவில் லையா?
பதில்:- பாதுகாப்பு புலனாய்வு அதிகாரி கள் கூட ஆரம்பத்தில் எமக்கு ஒன்றும் கூறவில்லை. போதைப்பொருள் கடத்தல் விடயங்கள் குறித்து அதிகமாகப் பேசினோம். ஆனால் அப்போதும் கூட இதனைக் கூறவில்லை. ஆனால் இதன் பாரதூரம் விளங்கிய காரணத்தால் தான் சர்வதேச பொலிஸ் உதவியும் கேட்கப்பட்டது.
கேள்வி:- என்ன செய்தும் அவரைத் தடுக்க முடியவில்லையே…?
பதில்:- ஆம். சர்வதேச புலனாய்வுத் தகவல் கிடைத்தும் நாம் அதனை சரியாக பயன்படுத்தியிருக்க வேண்டும்.
கேள்வி:- நீங்கள் கைதுகளை வலியுறுத்தவில்லையா?
பதில்:- ஆம், நான் சிறிது காலம் பதவியில் இருந்தேன். அதுவரை நான் நடவடிக்கை எடுத்தேன். நீங்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் நான் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை.
கேள்வி:- உங்களுக்குக் கிடைத்த அறிக்கையில் இரண்டு அறிக்கைகள் ஐ.எஸ் மற்றும் தௌஹீத் ஜமாஅத் குறித்து கிடைத்ததாகக் கூறினீர்கள். எந்தக் காலத்தில்?
பதில் :- மே மாதமே இரண்டும் கிடைத்தன. மே 17ஆம் திகதி மற்றும் 19ஆம் திகதி.
கேள்வி:- அப்படியென்றால் திகன சம்ப வத்தின் பின்னர் அதில் சமூக ஊடகங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதா?
பதில்:- ஆம்
கேள்வி:- என்ன இருந்தது அதில்? நீங்கள் பார்த்தீர்களா?
பதில்:- பார்த்தேன்
கேள்வி:- தமிழில் தானே அவர் கூறி யுள்ளார்.
பதில்:- ஆம், மொழிபெயர்ப்பு பார்த்தேன்.
கேள்வி:- கைதுகள் ஏன் தாமதம் என நீங்கள் தேடிப் பார்த்தீர்களா ?
பதில்:- ஆம், பொலிசார் தொடர்ந்தும் தேடுதல் நடத்தியுள்ளனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!