கூட்டமைப்பின் ஆதரவு தேவையில்லை!

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் பெரும்பான்மையான ஆதரவு எமது வேட்பாளருக்கே கிடைக்கும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“இறுதியாக நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை எதிர்த்து போட்டியிட்டு 65 வீதமான வாக்குகளைப் பெற்ற கட்சிகளில், பெரும்பான்மையான கட்சிகள் மகிந்த ராஜபக்சவினால் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளன.

மகிந்த ராஜபக்சவின் தலைமையில் புதிதாக அமையவுள்ள அரசாங்கத்தின் கீழ் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அடையாளம் கண்டு அவற்றுக்கு உண்மையான தீர்வினை காணவுள்ளோம். ஆகையினால் தமிழ் பேசும் மக்கள் எமக்கு ஆதரவு வழங்க வேண்டும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட்டமைப்பினரால் 35 வீதமான வாக்குகளையே வடக்கில் பெற்றுக்கொள்ள முடிந்தது. ஆகவே அவர்கள் எமக்கு எதிர்ப்பினை வெளியிடுவார்களாயின் எமக்கு 65 வீத வாக்குகள் கிடைக்கும்.

அவர்கள் எம்முடன் இணைந்தாலும் இணையாவிட்டாலும் கட்சி என்ற வகையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் தமிழ் பேசும் மக்களுடன் இணைந்து அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர, உண்மையான தீர்வினை காணும் அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக நாம் செயற்படுவோம்.

வடக்கின் பல கட்சிகள் மற்றும் அமைப்புகள் எம்முடன் இணைந்து செயற்பட தாயராக இருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக அளிக்கப்பட்ட 65 வீத வாக்குகளுக்கு உரிமையானவர்கள் எம்முடன் இணைந்து செயற்படவுள்ளார்கள்.அவர்கள் மாகாண சபைத் தேர்தலிலும் தனித்து களமிறங்குவார்கள்” என பசில் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!