ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவின்றி எந்த கட்சிக்கும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியாது எனத் தெரிவித்த அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராகக் களமிறக்குவது என்ற நிலைப்பாட்டிலிருந்தும் தாம் பின்வாங்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் 3 ஆம் திகதி சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ள கட்சி சம்மேளனத்தின் பின்னர் காலி மாவட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாவட்ட சம்மேளனம் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
திங்கட்கிழமை மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் பல்வேறு தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக சுதந்திர கட்சி உறுப்பினராக இருந்து கொண்டு ஐக்கிய தேசிய கட்சி , பொதுஜன பெரமுன உள்ளிட்ட வெவ்;வேறு கட்சிகளுக்காக செயற்பட்டுக் கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சகலருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டு அந்த யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
எஸ்.பி.திஸாநாயக்க உள்ளிட்டோரது பதவி மாத்திரமே தற்போது நீக்கப்பட்டுள்ளது. அவர்களது கட்சி உறுப்புரிமை நீக்கப்படுவது குறித்து ஆராயப்படவில்லை. எனினும் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு அவர்களது பிரதிபலிப்பு எவ்வாறு இருக்கிறது என்பதை அறிந்து கொண்ட பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து தற்போது ஐக்கிய தேசிய கட்சி சார்பில் செய்பட்டுக் கொண்டிருக்கும் விஜித் விஜியமுனி சொய்சா, பௌசி ஆகியோருக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து எதிர்காலத்தில் ஆராயப்படும்.
காரணம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டிருந்த போது, அவர்களை தேசிய பட்டியலுக்கூடாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்தது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவேயாகும். ஜனாதிபதியின் நம்பிக்கைக்கு இவர்கள் துரோகமிழைத்துள்ளனர். அத்தோடு தேர்தலில் வெற்றி பெற்று நேரடியாக பாராளுமன்றத்திற்கு தெரிவானவர்களை விட தேசிய பட்டியலுக்கூடாக தெரிவானவர்களுக்கு பொறுப்பு கூறல் அதிகமாகக் காணப்படுகிறது. அவர்களில் இதிலிருந்து விலகவும் முடியாது. இவ்வாறானவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும் அது கட்சிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
செப்டெம்பர் 3 ஆம் திகதி மாநாட்டின் போது சுதந்திர கட்சியின் கொள்ளைத் திட்டங்கள் அறியப்படுமத்தப்படும். அத்தோடு அந்த மாநாட்டில் எமது பலம் வெளிப்படுவதைக் கொண்டு அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து தீர்மானிக்க முடியும். எனவே அதுவரையில் வேட்பாளர் குறித்து எமக்கு உறுதியாகக் கூற முடியாது.
வெகுவிரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளது. அத்தோடு சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பும் இடம்பெறவுள்ளது. இந்த இரு சந்திப்புக்களும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையான அமையும் என்று எதிர்பார்க்கின்றோம். அத்தோடு இதிலிருந்து சு.கவின் ஆதரவின்றி யாருக்கும் வெற்றி பெற முடியாது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் உரிய நேரத்தில் சுதந்திர கட்சி தீர்க்கமானதொரு முடிவினை எடுக்கும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னுடைய எதிர்காலம் குறித்து சுயநலமாக சிந்திக்காது கட்சி ரீதியில் தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளார். எனவே அவ்வாறே எமது தீர்மானம் அமையும் என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!