போதை பொருட்களை சவப்பெட்டியில் கடத்திய கும்பல்!

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் போதைப்பொருட்களை ஒழிப்பதற்கு போதைப்பொருட்கள் தடுப்பு போலீஸ் படை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. தீவிர வாகன சோதனைகளையும் நடத்தி வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள சான்டான்டர் பகுதியில் போதைப்பொருள் தடுப்பு போலீஸ் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, வேகமாக வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்தனர். அந்த காரில் 2 சவப்பெட்டிகள் இருப்பதைக் கண்டனர். ஆனாலும் அந்த சவப்பெட்டிகளை அவர்கள் கொஞ்சமும் தயக்கமின்றி இறக்கி திறந்து பார்த்தால் அங்கே அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவற்றினுள் இறந்தவர்களின் உடல்கள் இல்லை.

மாறாக 300 கிலோ கஞ்சா சிறுசிறு பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர். அவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். சவப்பெட்டிகளில் கஞ்சாவை கடத்தி வந்து, அதுவும் போதைப்பொருட்கள் தடுப்பு போலீஸ் படையிடம் பிடிபட்டு இருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!