சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முடிவு இன்று வெளிவரும்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால அரசியல் திட்டம் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று அறிவிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 68 ஆவது ஆண்டு மாநாடு இன்று கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அதிபர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று முன்னர் அந்தக் கட்சியின் தலைவர்கள் கூறி வந்தனர்.

எனினும், அதன் பின்னர் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுக்களில் சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்தப் பேச்சுக்களில் கணிசமான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்ட போதும், இரண்டு தரப்பிலுள்ளவர்களும் எதிர்மறையான கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அதிபர் தேர்தல் தொடர்பான நிலைப்பாடு, கட்சியின் எதிர்கால அரசியல் திட்டம் குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!