ரணில் – சஜித் தனியாகச் சந்தித்துப் பேச முடிவு

அதிபர் தேர்தல் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில் ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவும் நாளை தனியாகச் சந்தித்துப் பேசவுள்ளனர்.

ஐதேகவின் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிடுவேன் என்று பிரகடனம் செய்து கொண்ட சஜித் பிரேமதாச, பதுளை, மாத்தளை, குருநாகல ஆகிய இடங்களில் பாரிய பேரணிகளை நடத்தியிருந்தார்.

இந்தநிலையில் தானே அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க நேற்று கட்சியின் மூத்த தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் இரண்டு தரப்பு ஆதரவாளர்களும் மோதிக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

இந்தநிலையில், சஜித் பிரேமதாசவுடன் தனியாகச் சந்தித்துப் பேசி முடிவு காண வேண்டும் என்று ரணில் விக்ரமசிங்கவிடம் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் கோரியிருந்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட ரணில் விக்ரமசிங்க, நாளை சஜித் பிரேமதாசவை தனியாகச் சந்தித்து, அதிபர் வேட்பாளர் குறித்து பேசி முடிவு செய்யவுள்ளார்.

நாளை நடக்கவுள்ள இந்தச் சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!