ரணில், கரு, சஜித், பொன்சேகா ஆகியோருள் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளர் – ரவி

பிரதமர் ரணில் -அமைச்சர் சஜித் பேச்சுவார்த்தையில் பொது இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும் என்பதே எமது நோக்கமாக உள்ளது எனத் தெரிவித்த அமைச்சர் ரவி கருணாநாயக்க, ரணில், கரு, சஜித், பொன்சேகா ஆகிய நால்வரில் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் உள்ள வேட்பாளர் நெருக்கடி விவகாரம் குறித்தும் அமைச்சர் சஜித் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தை குறித்த விடயங்களை வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அந்தஸ்தை அச்சுறுத்தியோ எச்சரிக்கை விடுத்தோ தட்டிப்பறிக்க முடியாது. அதேபோல் கட்சிக்குள் ஒருபோதும் பிளவும் ஏற்படுத்த முடியாது. சிலர் கட்சியை பிளவுபடுத்த முயற்சிகளை எடுக்கலாம். சில கற்பனைகளை கொண்டு சிலரது பேச்சுக்களை கேட்டு கட்சியை பிளவுபடுத்த முடியும்.

ஆனால் அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். கட்சிக்குள் எப்போதுமே ஜனநாயக ரீதியிலான நகர்வுகளுக்கு முதலிடம் உள்ளது. எவரும் எந்தக் கருத்துக்களையும் கூற முடியும், ஆனால் அது கட்சியையோ ஆதரவாளர்களையோ பாதிக்கும் வகையில் அமைந்துவிடக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!