4-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த இரண்டு ஆசிரியர்கள்!

ஜார்க்கண்ட் மாநிலம் டாப்சாஞ்சி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்த மாணவி, கடந்த மாதம் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அந்த மாணவியை, சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ அறைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்து அந்த மாணவியை வகுப்பாசிரியரும், பள்ளியின் துணை முதல்வரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த விவகாரம் சமீபத்தில்தான் தெரியவந்துள்ளது. மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர்.

மாணவியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என கூறி உள்ளனர். இதையடுத்து பெற்றோர் தீவிரமாக விசாரித்தபோது நடந்த சம்பவத்தை மாணவி கூறி அழுதுள்ளார். பின்னர் இதுபற்றி கத்ராஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண் உள்ளூர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதனை காவல்துறை பதிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படுகிறது. மாணவியின் மருத்துவ பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!