சஜித்தை தவிர ரணிலுக்கு வேறு வழியில்லை – அஸாத் சாலி

அமைச்சர் சஜித்தை வேட்பாளராக நியமிப்பதைத் தவிர பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வேறு வழியில்லை என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

தேசிய ஐக்கிய முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்கவேண்டும் என கட்சியின் பாராளுமன்ற குழு மற்றும் செயற்குழுவில் பெரும்பான்மையானவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கும் கட்சிகளும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவிக்கின்றன. அதனால் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதைத்தவிர ரணில் விக்ரமசிங்கவுக்கு மாற்றுவழியில்லை.

அத்துடன் சஜித்துக்கு ஆதரவாக கூட்டம் நடத்தியமைக்காக அமைச்சர்களான அஜித் பி பெரேரா மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போவதாக கட்சியின் செயலாளர் அறிவித்திருக்கின்றார். இவர்கள் கட்சிக்கு எதிராக செயற்படவில்லை. கட்சியை பலப்படுத்தவே செயற்பட்டுள்ளனர்.

ஆனால் கட்சியை காட்டிக்கொடுத்து இன்று பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொண்டு கட்சிக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக செயலாளரினால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!