போர் எச்சரிக்கை விடுத்த ஸ்வீடன்: – பொதுமக்களை தயாராக இருக்க வலியுறுத்தல்

ஸ்வீடன் அரசு நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் போர் தொடர்பில் எச்சரிக்கை தகவல்களை விநியோகித்து எதிர்கொள்ள தயாராகும்படி வலியுறுத்தியுள்ளது. இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் இதுபோன்ற ஒரு எச்சரிக்கை தகவல்களை பொதுமக்களுக்கு அளிப்பது இதுவே முதன் முறையாகும்.

ரஷ்யாவின் போர் விமானம் மற்றும் நீர்மூழ்கி கப்பல் ஒன்று ஸ்வீடன் எல்லைக்குள் அத்துமீறிய நிலையிலேயே இந்த போர் எச்சரிக்கை தொடர்பில் புத்தகம் ஒன்றை அச்சிட்டு நாட்டின் 4.8 மில்லியன் குடும்பத்தாருக்கும் அரசு விநியோகம் செய்துள்ளது. 20 பக்கங்கள் கொண்ட குறித்த புத்தகத்தில் போர் மூளும் பட்சத்தில் குடிமக்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் விளக்கப்பட்டுள்ளது. உணவு பண்டங்கள் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகலாம் எனவும், தேவைக்கு மிகுதியாக சேமிக்க வேண்டும் எனவும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ராணுவம் தரும் அவசர எச்சரிக்கைகளை எவ்வாறு புரிந்து கொள்வது, அதன் பொருள் என்ன என்பது தொடர்பிலும் அந்த புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் பொதுமக்கள் எவ்வாறு உதவலாம் எனவும் அதில் பட்டியல் இடப்பட்டுள்ளது. புகைப்படங்களால் விளக்கப்பட்டுள்ள குறித்த புத்தகத்தில், இணைய தாக்குதல், பயங்கரவாத தாக்குதல், பருவநிலை மாற்றம் உள்ளிட்டவைகளை எதிர்கொள்ளவும் போலியான தகவல்களை எவ்வாறு முறியடிப்பது தொடர்பிலும் குடிமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடன் நாடு பல்வேறு அண்டை நாடுகளை விடவும் பாதுகாப்பில் சிறந்து விளங்கினாலும், அச்சுறுத்தல் தொடர்வதாகவும் அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 200 ஆண்டுகளில் ஸ்வீடன் எந்த நாட்டுடனும் போருக்கு சென்றதில்லை. இருப்பினும் அச்சுறுத்தல் வந்தால் ஸ்வீடன் அதை எதிர்கொள்ள தயங்காது எனவும் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!