இராணுவமாக நாம் எப்போதும் சர்வதேச சட்டங்கள், பொது உடன்படிக்கைகள் என்பவற்றில் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் அரசியல் அமைப்பு மற்றும் சட்ட திட்டங்களுக்கு அமைய எமது கடமைகளையும் பொறுப்புகளையும் முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மாதுரு ஓய இராணுவ பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி பெற்றவர்கள் வெளியேறும் நிகழ்வு நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
எமது இராணுவம் எப்போதும் ஐக்கிய நாடுகள் சபையின் கௌரவத்தை பெற்ற இராணுவமாக செயற்பட்டு வருகின்றது. சர்வதேச ரீதியிலும் எமது இராணுவத்திற்கு நல்லதொரு வரவேற்பு உள்ளது. அதன் காரணமாகவே ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையின் சேவையில் எமது சிறப்புப் படைகளை இணைத்துக்கொள்ள முடியுமாக உள்ளது. ஆகவே நாம் எப்போதும் சர்வதேச சட்டங்கள், பொது உடன்படிக்கைகள் என்பவற்றில் இணக்கம் தெரிவித்து இலங்கையின் அரசியல் அமைப்பின் பிரகாரம், பாதுகாப்பு அமைச்சின் கீழ் கடைப்பிடிக்கும் அரசியல் அமைப்பு மற்றும் சட்ட திட்டங்களுக்கு அமைய எமது கடமைகளையும் பொறுப்புகளையும் முன்னெடுக்க வேண்டும்.
பாதுகாப்புப்படை தமது சேவைகளை நிறைவேற்றும் போது ஆயுதங்களினால் மட்டுமன்றி அறிவு, இயலுமை, ஆக்கத்திறன் என்பவற்றினாலும் பலம்பெற்று அவர்களது திறமைகளை வெளிக்காட்ட வேண்டும். இதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!