அரசியல்வாதிகளுக்கு ‘கால்கட்டு’ – இன்று வெளியாகிறது மற்றொரு அரசிதழ்

அதிபர் தேர்தல் நடைபெறும் வரை, அரசியல்வாதிகளின் சில செயற்பாடுகளுக்கு தடைவிதிக்கும் சிறப்பு அரசிதழ் அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வெளியிடவுள்ளது.

இந்த அரசிதழ் அறிவிப்பின் படி, இடமாற்றங்கள், பதவி உயர்வுகள், அரச நிறுவனங்களுக்கான புதிய நியமனங்களுக்கு தடைவிதிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

எனினும், மருத்துவர்கள், ஆசிரியர்கள் போன்ற குறிப்பிட்ட முக்கியமான நியமனங்களை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

எனினும், அவ்வாறான நிகழ்வுகளுக்கு, குறித்த அமைச்சுக்களின் செயலர்களே தலைமை தாங்க முடியும்.

அத்துடன் அரசியல் செயற்பாடுகளுக்கு அரசாங்க சொத்துக்களை பயன்படுத்துவதை தடுப்பதற்கான உத்தரவும், இந்த அரசிதழில் இடம்பெறும் என்றும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!